தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அதிவேக வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் மின்சாரத் திரைகளில் காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை வாசகங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் பகல் நேரத்திலும் இருள் மற்றும் மூடுபனி நிலவுவதால், வாகனங்களின் முன்பக்க விளக்குகளை ஒளிரவிட்டவாறு பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகனங்களை மணிக்கு 60 கிலோமீற்றர் என்ற வேக எல்லைக்குள் வைத்துக்கொள்ளுமாறும், கட்டுப்பாட்டுடன் கூடிய வேகத்தில் பயணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னால் செல்லும் வாகனத்திற்கும் உங்கள் வாகனத்திற்கும் இடையில் போதிய இடைவெளியைப் பேணுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதிக வேகத்தில் பயணிக்கும்போது திடீரென பிரேக் இடுவது விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், அது ஆபத்தானது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் அதிவேக வீதிகளில் வழுக்கும் தன்மை அதிகமாக இருக்கும் என்பதால் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.




