வீடு ஒன்றினை உடைத்து 32 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த தங்க நகை, பணம் என்பவற்றினை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய அநுராதபுரம் திறப்பனை பொலிஸார் பல கோணங்களிலும் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அநுராதபுரம் பொலிஸ் வலயத்தின் திறப்பனை பொலிஸ் பிரிவிலுள்ள கல்குளம் பகுதி வீடொன்றில் 28ஆம் திகதி இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் திருட்டுச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரினால் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினை அடுத்து திறப்பனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
21 இலட்சத்து இருபதாயிரம் ரூபா பணம் மற்றும் 32 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த தங்க ஆபரணங்கள் திருடர்களால் திருடப்பட்டுள்ளமை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டில் இருந்து தெரியவந்துள்ளது.
வீட்டார், உறவினர் ஒருவரது திருமண வைபவத்துக்கு சென்றிருந்த வேளையில் திருடர்கள் ஜன்னலை உடைத்து, வீட்டுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் திறப்பனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.




