கணினி குற்றச்செயல்: 30 வெளிநாட்டவர்கள் கைது!

பொரலஸ்கமுவ, 10ஆம் மைல்கல் பகுதியில், கணினி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 30 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிசை பிரதேச குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்று வியாழக்கிழமை (07) மதியம் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது 20 முதல் 54 வயதுக்குட்பட்ட சீன மற்றும் வியட்நாம் நாடுகளைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து குற்றச்செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட 05 கணினிகள், 26 கையடக்கத் தொலைபேசிகள், 05 ரௌட்டர்கள் (Routers) மற்றும் ஏனைய கணினி உதிரிபாகங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.