கிளிநொச்சியில் அதிர்ச்சிச் சம்பவம்: தாயால் விலை பேசி விற்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தை பாதுகாப்பாக மீட்பு!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னை நீராவிக் கிராம அலுவலர் பிரிவில் ஒன்றரை வயதுப் பெண் குழந்தையை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்ற தாய் மற்றும் இடைத்தரகர் ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை (26.04.2026) கைது செய்யப்பட்டுள்ளனர்.

தர்மபுரம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட திடீர்ச் சுற்றிவளைப்பில் குழந்தையின் தாய் மற்றும் அதற்கு உடந்தையாகவிருந்த நபர் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி தர்மபுரம் 7 ஆம் யுனிற் பகுதியில் வசிக்கும் தாய் ஒருவரே இவ்வாறு தனது குழந்தையைப் பணத்துக்காக விற்பனை செய்துள்ளார். மீட்கப்பட்ட குழந்தை தற்போது மருத்துவப் பரிசோதனைக்காகவும், பாதுகாப்புக்காகவும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வறுமை அல்லது வேறு காரணங்களால் இந்த விற்பனை நடைபெற்றதா? என்பது குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த குழந்தையை விலைபேசி விற்றமை தொடர்பான புகைப்படமும், இதுதொடர்பான கடிதமும் சற்றுமுன் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயற்பாட்டுக்குப் பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர்.