தேசிய சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது – எல்லே குணவங்ச தேரர்

டொலர் மற்றும் யூரோவின் மதிப்பு உயர்வதைக் காரணம் காட்டி நாட்டின் தேசிய சொத்துக்களை துண்டு துண்டாக விற்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.

இலங்கையின் 54ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

டொலர் மற்றும் யூரோவின் மதிப்பு உயர்வதைக் காரணம் காட்டி நாட்டைத் துண்டு துண்டாக விற்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எமக்குத் தேவை வெளிநாட்டுத் தலைவர்கள் அல்ல, இந்த மண்ணின் பாரம்பரியத்தை உணர்ந்த தலைவர்களேயாகும்.

தற்போது சமூக ஊடகங்கள் மூலம் திட்டமிட்ட முறையில் பௌத்த சாசனத்துக்கும், தேரர்களுக்கும் மற்றும் கலாசாரத்துக்கும் எதிராக நற்பெயர் களங்கப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பௌத்தத்தின் உன்னத விழாக்களான வெசாக் மற்றும் பொசொன் பண்டிகைகளின் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்கும், எமது புத்தாண்டு சுப நேரங்களைக் குழப்புவதற்கும் சில தரப்பினர் முயற்சிக்கின்றனர். இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு முன்னால் மகா சங்கத்தினரும் பௌத்த மக்களும் மௌனமாக இருக்கக் கூடாது என்றார்.