மக்களின் வரிப்பணத்தை பாதுகாக்க முடியாத நிலையில் அரசாங்கம்

திறைசேரியில் உள்ள மக்களின் வரிப்பணத்தைப் பாதுகாக்க முடியாத அளவிற்கு தற்போதைய அரசாங்கம் நிர்வாகத் திறமையற்று இருக்கிறது. நிதி மோசடி விபரங்களை பல மாதங்களாக பாராளுமன்றத்துக்கு தெரிவிக்காமல் மறைத்திருப்பது பாரிய சதியாகும். இந்த இழப்புகளை ஈடுகட்ட மீண்டும் மக்களின் மீதே வரிச் சுமைகள் திணிக்கப்படுன ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்த அரசாங்கத்திற்கு அனுபவம் இல்லை. இவர்களால் இந்த பொறுப்பை சுமக்க முடியாது என்றுதான் நாம் ஏற்கனவே நாட்டு மக்களிடம் கூறினோம். ஆனால் வெறுப்புணர்வைப் பரப்பி மக்களை இவர்கள் ஏமாற்றினார்கள். அந்த ஏமாற்றத்தின் விளைவைத்தான் இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த அரசாங்கத்தால் திறைசேரியில் உள்ள பணத்தைக் கூடப் பாதுகாத்துக்கொள்ள முடியாமல் போயுள்ளது. இது இந்த நாட்டு மக்களின் பணம், பெலவத்தையிலிருந்து மாறாக பெலவத்தையிலிருந்து கொண்டுவரப்பட்ட பணம் அல்ல. மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களிடம் வசூலிக்கப்பட்ட பணமும் அல்ல.

இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தைத்தான் இவர்கள் நாசமாக்கியிருக்கிறார்கள். அப்படியானால் இதற்கு யார் பொறுப்பேற்பது என்று நாம் கேட்கிறோம். பெலவத்தையிலிருந்து இந்தப் பணத்தை மீளத் தருவார்களா? அல்லது ஜனாதிபதி வழங்குவாரா?

இறுதியில் அன்று நடந்த அந்த நிலக்கரி மோசடி, கன்டெய்னர் விவகாரம் போன்றவற்றைப் போலவே, இந்த இழப்பையும் மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தோ, பெற்றோல், டீசல் விலையை உயர்த்தியோ அல்லது எரிவாயு விலையை அதிகரித்தோ மக்களின் தலையில்தான் சுமத்துவார்கள்.

அரசாங்கம் இப்போது என்ன சொல்கிறது? எதிர்க்கட்சியினர் எல்லாவற்றிற்கும் தடையாக இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். எதிர்க்கட்சியின் கடமை அரசாங்கம் தவறு செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டுவதுதான். ஆனால் இன்று ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது. பல மாதங்களாக இந்தத் தகவலை அரசாங்கம் மறைத்து வைத்திருக்கிறது. பாராளுமன்றம் என்பது நிதி தொடர்பான பொறுப்புள்ள ஒரு நிறுவனம். ஆனால்

பாராளுமன்றத்துக்கு இது தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை.  ஜனாதிபதியும் இதைத் தெரிந்து கொண்டுதான் மறைத்து வைத்திருந்தாரா? அதுமட்டுமல்ல, பாராளுமன்றத்தில் நிதி தொடர்பான குழு இருக்கிறது. அந்தக் குழுவுக்கும் இது தெரியாது.

அப்படியானால் இந்தச் சதி என்ன? இது ஒரு திருட்டா? இந்தப் பணம் யாருக்குச் சென்றது? அந்தப் பணத்தை மீண்டும் எடுக்க முயற்சி செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. இது இன்னொரு பொய்யாகும்.

திருடப்பட்ட பணத்தை பல மாதங்கள் சென்ற பின்னர் எவ்வாறு மீளப் பெற முடியும்? உகாண்டாவில் உள்ள பணத்தைக் கொண்டு வருவோம், ராஜபக்சக்களிடமிருந்து பணத்தை மீட்போம் என்று இவர்கள் கூறினார்கள். அதையே இன்னும் செய்ய முடியாதவர்களா இந்த மோசடியில் இழந்த பணத்தை மீட்கப்போகிறார்கள்? என்றார்.