பாயகலை, விஹாரகந்த பகுதியில் நடைபெற்ற மதுபான விருந்தொன்றின்போது ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாயகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை தெற்கு பாயகலை, விஹாரகந்த பகுதியில் உள்ள வீடொன்றில் செவ்வாய்க்கிழமை (14) இரவு புத்தாண்டு மதுபான விருந்தொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது அங்கிருந்த நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது.
இந்த மோதலில் தெற்கு பாயகலை புகையிரத நிலையத்துக்கு அருகில் உள்ள காய்கறி விற்பனை நிலையத்துக்கு முன்பாக வைத்து நபர் ஒருவர் பலமாகத் தாக்கப்பட்டுள்ளார். பொல் ஒன்றினால் தலையில் தாக்கப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பாயகலை பகுதியை சேர்ந்த 49 வயது நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் மற்றும் கொலை தொடர்பில் பாயகலை பொலிஸார், சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.





