யாழ். நகரப் பிரதேசத்திற்கு முறையான வடிகாலமைப்பு பிரதான திட்டம் மீளவும் தயாரிக்கப்படல் வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்தார்.
யாழ்ப்பாணம் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை (26) பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த வேண்டுகோளை முன்வைத்தார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை நகர அபிவிருத்தி அதிகார சபை தலைமை அலுவலகத்தால் யாழ் நகரத்திற்கான பிரதான வடிகாலமைப்பு திட்டம் தயாரிப்பதில் பாரிய மோசடி இடம்பெற்றது.
அம்மோசடிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் அம்பலப்படுத்தப்பட்டபோதும் கடந்த 2020 காலப்பகுதியில் யாழ்மாநகர சபையை ஆட்சி செய்த தரப்புக்களால் மூடிமறைக்கப்பட்டது.
அப்போதய ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்தவரது ஆதரவுடன் மாநகர மேயராக கதிரை ஏறி தமது பதவிப் பசியை தீர்த்துக் கொண்டவர்கள், கோட்டா அரசின் ஊழலை மறைப்பதற்காக இவ் ழலை மூடிமறைத்தார்கள். அதனால் 1375 கோடியில் புதுப்பொலிவுடன் மிளிர்ந்திருக்க வேண்டிய யாழ்நகரம் பாழாய்க் கிடக்கிறது.
எனவே தனிதனியாக திட்டங்களை தெரிவு செய்யாது யாழ்நகருக்கு என்று திட்டத்தை தயார்செய்து அதனை வைத்து பகுதி பகுதியான திட்டங்களை செய்யவேண்டும் என்றார்.



