ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சேவை வழங்குநர் ஒருவரின் மின்னஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்பட்டமையுடன் தொடர்புடைய தவறான கொடுப்பனவு மற்றும் இந்தியாவில் நிறுவனத்தின் நிதி முறைகேடு செய்யப்பட்டமை ஆகிய இரு பரிவர்த்தனைகள் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்த நிதி முறைகேடு குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஸ்ரீ லங்கன் எயார்லைன் நிறுவனத்தால் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சேவை வழங்குநருக்கு செலுத்தபட்ட நிதி மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேபோல் இந்தியாவில் நிறுவனத்தின் நிதி முறைகேடு செய்யப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்விரு பரிவர்தனைகள் செலுத்தலுக்கும் இலங்கை நிறுவனத்துக்கும் இடையில் நேரடி தொடர்பு கிடையாது.
சர்வதேச மற்றும் தேசிய நிதி கொடுக்கல் வாங்கலின் போது பாதுகாப்பு கட்டமைப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் இவற்றையும் தமது அரசியல் பிரசாரத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றார்.





