அரசாங்கம் பாரிய டொலர் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளதால், வாகன இறக்குமதியை தடை செய்யாமல் வாகனங்களுக்கான வரியை அதிகரித்துள்ளது. எதிர்காலததில் வீடுகளில் பயன்படுத்தப்படும் இலத்திரனியல் உபகரணங்களுக்கும் வரியை அதிகரிக்கும். அதனால் கோத்தபாய சென்ற வழியிலேயே இந்த அரசாங்கம் பயணிக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரி்க்கார் தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
அரசாங்கம் 33வீதம் மின்சார கட்டணத்தை குறைப்பதாக தெரிவித்து, தற்போது மின்சார கட்டணத்தை தற்போது 40 வீதம் அதிகரித்துள்ளது. அதேபோன்று உணவு. கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான பொருட்களின் வரியை பூச்சியமாக்குவதாகவே தெரிவித்தது. ஆனால் 2024 செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இருந்ததை விட அதிக விலைக்கே உணவுப்பொருட்கள் மருந்துப்பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்கிறோம்.
அதேபோன்று தற்போது டொலரின் பெருமதி 330 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் டொலருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திறைசேரியில் இருந்து 2,5 மில்லியன் டொலர் காணாமல் போயுள்ளது. என்.டி.பி வங்கி, ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் போன்ற நிறுவனங்களில் இருந்து பாரியளவில் டொலர் மோசடி செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் அரசாங்கம் எதுவும் கதைப்பதில்லை. அதனை மறைப்பதற்கே முயற்சித்து வருகிறது.
அதேநேரம் அரசாங்கம் தற்போது இறக்குமதி செய்யும் வாகனங்களுக்கு 50 வீத வரி அதிகரித்துள்ளது. டொலரை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு வாகனம் இறக்குமதி செய்வதை தடை செய்திருக்கலாம். அதனை செய்யாமல், வாகனங்களுக்கான வரியை அதிகரித்து, மக்களுக்கு வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய முடியுமாகி இருந்த அந்த இயலுமையை இல்லாமல் செய்திருக்கிறது. எதிர்காலத்தில் அரசாங்கம் வீட்டு உபகரணங்களான ஆடை சலவை இயந்திரம், மின்விசிறி போன்ற இலத்திரனியல் உபகரங்களின் இறக்குமதி வரியை அதிகரிக்கும். அரசாங்கம் கோத்தபாய அரசாங்கம் பயணித்த வழியிலே செல்கிறது.
மக்கள் அனுபவமில்லாத கோத்தபாய ராஜபக்ஷ்வை நாட்டின் ஜனாதிபதியாக்கி, நாட்டை வங்குராேத்தாகியது. அதேபோன்று பரீட்சித்துப்பார்ப்பதற்காக அநுர குமாரவை ஜனாதிபதியாக்கி, கைசேதப்படுகிறார்கள். இந்த அரசாங்கத்துக்கு முடியாது என்பதை மக்கள் தற்போது உணர்ந்து வருகிறார்கள். அதனால் மக்களுக்கு அடுத்த மாற்று வழியாக இருப்பது, அனுபவமுள்ள, பரீட்சித்து பார்க்கப்படாத ஒரே தலைவர் சஜித் பிரேமதாசவும் அவரது அணியான ஐக்கிய மக்கள் சக்தியாகும். நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய முடியுமான ஆளுமையும் திறமையும் உள்ளவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிலே இருக்கிறார்கள் என்றார்.




