முன்னாள் புலனாய்வுத் துறை அதிகாரி சுரேஷ் சலேவின் மனைவி மனோரி சலே, தன்னையும் தனது இரு பிள்ளைகளையும் சந்தேகத்திற்கிடமான வகையில் கண்காணித்து வருவதாகக் கூறி, குற்றங்களில் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சிவில் உடையணிந்த நபர் ஒருவர், தொடர்ச்சியாக தங்களைப் பின்தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 20ஆம் திகதி, தங்களது தந்தையின் நலம் விசாரிப்பதற்காக தேசிய வைத்தியசாலைக்குச் சென்றிருந்த தனது 17 வயது மகளையும் 22 வயது மகனையும் குறித்த நபர் பின்தொடர்ந்து சென்று, கைத்தொலைபேசியில் புகைப்படங்கள் அல்லது காணொளிகள் பதிவு செய்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதற்கு முன்னரும் தேசிய வைத்தியசாலை மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்திற்கு அருகில் அந்த நபர் நடமாடியதை கவனித்துள்ளதாக மனோரி சலே தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபரின் அடையாளத்தையும், அவர் யாரின் அறிவுறுத்தலின் பேரில் செயற்பட்டார் என்பதையும் கண்டறிய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய அதிகார சபையிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.





