அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை: திருப்பத்தூர் அருகே குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால், காயமடைந்த நிலையில் வந்த நபருக்கு தூய்மைப் பணியாளர் ஒருவர் சிகிச்சை அளிப்பது போல ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள், தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி அரசு தலைமை மருத்துவமனைகள் வரை உரிய ஆய்வு மேற்கொண்டு, அங்கு 24 மணிநேரமும் சுழற்சி அடிப்படையில், மருத்துவப் பணியாளர்கள் இருப்பதை தமிழக அரசும், சுகாதாரத் துறையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




