கரும்புக்கான ஆதார விலை உயர்வும் அரசின் ஏமாற்று வேலை” – டிடிவி தினகரன்

“ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக வழங்கிய தேர்தல் அறிக்கையில், நெல் குவிண்டாலுக்கு 3,500 ரூபாயும், கரும்பு டன்னுக்கு 4,500 ரூபாயும் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த தவெக, ஆட்சிக்கு வந்த பின்பு கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற மறுப்பது நம்பி வாக்களித்த விவசாயப் பெருமக்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும்.” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடங்கி நெல், கரும்புக்கான ஆதார விலை உயர்வு வரை அனைத்து அறிவிப்புகளுமே விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றும் வேலை – தேர்தல் வாக்குறுதியில் சொல்வது ஒன்று ஆட்சிக்கு வந்த பின்பு செய்வது வேறு என்பதையே அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதல்வர் விஜய், சன்னரக நெல் குவிண்டாலுக்கு 2,750 ரூபாயாகவும், பொது ரக நெல் 2,600 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் எனவும், கரும்புக்கான ஆதார விலை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக வழங்கிய தேர்தல் அறிக்கையில், நெல் குவிண்டாலுக்கு 3,500 ரூபாயும், கரும்பு டன்னுக்கு 4,500 ரூபாயும் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த தவெக, ஆட்சிக்கு வந்த பின்பு கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற மறுப்பது நம்பி வாக்களித்த விவசாயப் பெருமக்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும்.

ஏற்கனவே, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பை முழுமையாக நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் விவசாயப் பெருமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக முதல்வர் விஜய், 110 விதியின் கீழ் அறிவித்திருக்கும் இன்றைய அறிவிப்பு யானைப் பசிக்கு சோளப் பொறியா ? என்று கேட்கும் வகையில் அமைந்திருக்கிறது.

60 வயதுக்குட்பட்ட அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் தோறும் 2,500 ரூபாய், ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள், தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றங்கள், 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம், வேலை தேடும் பட்டதாரிகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் இளைஞர் நல நிதி என தவெக கொடுத்த முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று கூட நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாத நிலையில், 110 விதியின் கீழான முதல்வரின் இன்றைய அரைகுறையான அறிவிப்பு தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது வேறு என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

எனவே, கொடுத்த வாக்குறுதியின் படி நெல் குவிண்டாலுக்கு 3,500 ரூபாயாகவும், கரும்பு டன்னுக்கு 4,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கிடுவதோடு, தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை அறைகுறையாக அறிவித்து மக்களை ஏமாற்றாமல் முழுமையாக நிறைவேற்றிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசையும், அதன் முதல்வர் விஜய்யையும் வலியுறுத்துகிறேன்.” என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.