புனித பூமியான திருவண்ணாமலையில் பெண்ணுக்கு எதிராக அரங்கேறிய கொடூரம்!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-புனித பூமியான திருவண்ணாமலையில் பெண்ணுக்கு எதிராக அரங்கேறிய கொடூரம்: பெண்களின் பாதுகாப்பை காற்றில் பறக்கவிட்ட தவெக அரசுக்கு கண்டனம்!

திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே உள்ள ஏரிக்கரையில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்து, நகை பறிப்பு செய்ததோடு, அவரை அரைநிர்வாணப்படுத்தி ஆபாச படம் எடுத்து மிரட்டியுள்ள கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பக்தி மணம் கமழும் புனிதமான திருவண்ணாமலையில், இத்தகைய மிருகத்தனமான சம்பவம் அரங்கேறியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. .சட்டம் ஒழுங்குமேடைகளில் மகளிர் உரிமை குறித்தும், புதியதொரு மாற்றம் குறித்தும் வாய்ஜாலம் காட்டி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, இன்று முந்தைய திமுக அரசை போலவே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறி முழுமையாக முடங்கி கிடக்கிறது.

மக்கள் நடமாட்டம் உள்ள கிரிவலப்பாதை பகுதியிலேயே 10 பேர் கொண்ட கும்பல் இத்தகைய துணிகரமான குற்றத்தில் ஈடுபடுகிறது என்றால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

இச்சம்பவத்தில் தொடர்புடைய 10 பேர் கொண்ட கும்பலில் தற்போது பிடிபட்டுள்ளவர்கள் மட்டுமின்றி, தலைமறைவாக உள்ள மற்ற அனைவரையும் உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விரைந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.