அமைச்சரை பதவி நீக்குக சுகாதார துறையில் ஜனாதிபதி தலையிட வேண்டும்

சுகாதாரத்துறை அமைச்சர் ஊழலுடன் தொடர்புப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் உரிமையான இலவச சுகாதார சேவையை கேள்விக்கு உட்படுத்தி மக்களின் வாழும் உரிமையை பறித்த சுகாதார துறையை மாற்றியமைக்க வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதி தலையீடு செய்ய வேண்டும் என எதிர்க் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

பண்டாரகமவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

விடயத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் ஊழலுடன் தொடர்புப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.   ஜனாதிபதி இது தொடர்பில் தலையீடு செய்ய வேண்டும். நாட்டு மக்களின் உரிமையான இலவச சுகாதார சேவையை கேள்விக்கு உட்படுத்தி மக்களின் வாழும் உரிமையை பறித்த சுகாதார துறையை மாற்றியமைக்க வேண்டும்.

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் இதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. இதை மேற்கொள்வதற்கு தற்போதுள்ள ஜனாதிபதிக்கு அதிகாரமுள்ளது. பொறுப்பு வாய்ந்த வேறு அமைச்சர் ஒருவரை நியமிக்க முடியும். சுகாதாரத்துறை தொடர்பில் போதுமான அறிவையும், அனுபவத்தையும் பெற்றுள்ள தரப்பினரை அமைச்சின்  செயலாளராகவும், பணிப்பாளராகவும் நியமிக்க முடியும்.

கம்பனிகளால் வழங்கப்படும் இலஞ்சங்களுக்கு அடிபணிந்து நாட்டின் சுகாதாரத் துறையை வளர்ச்சி நிலைக்கு இட்டுச் செல்ல முடியுமா? தேசிய மருந்து ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை புதிய குழுவினர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளவில்லை என்றால் நூற்றுக்கணக்கில்  மக்கள் உயிரிழப்பதை தவிர்க்கவே முடியாது. எனவே தயவு செய்து இது தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துங்கள் என்றார்.