இளம் பெண் மரணம்; ஐவரடங்கிய குழு இன்று விஜயம்

பேராதனை வைத்தியசாலையில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்ட பின்னர் இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான ஐவரடங்கிய குழு இன்று (15) வைத்தியசாலைக்கு விஜயம் செய்து விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

சில தினங்களில் சம்பந்தப்பட்ட குழு விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கையை சமர்ப்பிக்கும் என  சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

கண்டி பொத்துபிட்டிய அலகல்ல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சாமோதி சந்தீபனி ஜயரத்ன என்பவர் வயிற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த 11ஆம் திகதி பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மருந்துகள் ஊசி மூலம் ஏற்றப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உடல்நிலை ஓரளவு சீராக இருந்த இளம்பெண், ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்ட பிறகு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த பேராதனை வைத்தியசாலையின் பணிப்பாளர், பெண் மரணம் மருந்தினால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படவில்லை எனவும், ஒவ்வாமை காரணமாக மரணமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.