இலங்கை ஹாஜிகளுக்கான வசதிகள் குறித்து சவூதியில் விசேட கலந்துரையாடல்

இம்முறை ஹஜ் யாத்திரையில் பங்கேற்கும் இலங்கை யாத்திரிகர்களுக்கான அதிகபட்ச சேவைகள் மற்றும் வசதிகளை உறுதி செய்யும் நோக்கில், முஸ்லிம் சமய மற்றும் கலாசார  பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தலைமையில் சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையின் ‘சிலோன் ஹவுஸ்’ இல் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (24)  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹுலார் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஹஜ் முகவர்கள் சார்பாக பிரதான மொனசிம்களும் கலந்துகொண்டனர்.

ஹஜ் யாத்திரையின் மிக முக்கியமானதும் கடினமான கட்டங்களான மினா மற்றும் அரஃபா  ஆகிய புனித பூமிகளில் இலங்கை யாத்திரிகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள்  மற்றும் சுகாதார வசதிகளின் தற்போதைய நிலைமை மற்றும் ஹஜ் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

யாத்திரிகர்கள் எவ்வித தடையுமின்றி தமது மத வழிபாடுகளில் ஈடுபடும் வகையில் தங்குமிடம், குளிரூட்டி வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார அமைப்புகளை சிறந்த முறையில் தயார்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.