உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தொடர்புபடுத்தி அவரை கைது செய்வதற்கான நாடகமொன்றை அரசாங்கம் அரங்கேற்றுகிறது. அரசாங்கம் தமது இயலாமையை மறைக்கவும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைச் சரியாகக் கையாள முடியாமலும், ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவும் மேற்கொள்ளும் திட்டமிட்ட நாடகங்களாகும் என கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத்தடை மற்றும் தற்போதைய அரசியல் சூழலில் அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டமிட்ட செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக, ஒருங்கிணைந்த கூட்டு எதிர்கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து நுகேகொட நாளந்தாராம விகாரை வளாகத்தில் நேற்று புதன்கிழமை (03) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.
இந்த முக்கிய கலந்துரையாடலில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஒருங்கிணைந்த கூட்டு எதிர்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பெருமளவிலான மகா சங்கத்தினர் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுகீஸ்வர பண்டார கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
புத்த சாசனம் என்பது பிக்குகள், பிக்குணிகள் மற்றும் உபாசகர்களை உள்ளடக்கிய ஒரு உன்னதமான அமைப்பாகும். மகா சங்கத்தினருக்கு ஏதேனும் அநீதி அல்லது நெருக்கடி ஏற்படும் பட்சத்தில், பௌத்த உபாசகர்கள் என்ற ரீதியில் நாம் அதில் தலையிட வேண்டியது எமது தார்மீகக் கடமையாகும்.
தற்போதைய அரசாங்கம் கொண்டுவரும் சட்டங்கள் மூலம் எமது சங்கத்தினரின் குரலை நசுக்கவும், சாசனத்தின் சொத்துக்களைக் கையகப்படுத்தவும், தலதா மாளிகை மற்றும் அட்டமஸ்தானம் போன்ற புனித இடங்களை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும் முயற்சிப்பது பாரிய ஆபத்தாகும். எனவேதான், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பொதுப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம். தற்போதைய ஆட்சியாளர்கள் தார்மீக நெறிகளைப் பின்பற்றுவதில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தொடர்புபடுத்தி அவரை கைது செய்வதற்கான நாடகமொன்றை அரசாங்கம் அரங்கேற்றுகிறது. இதற்காகப் பயன்படுத்தப்படும் அசாத் மௌலானா, பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற ஒருவராவார்.
இவ்வாறான ஒருவரிடம் வாக்குமூலம் பெறுவது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பாரிய தவறு. இவரைத் தேடிச் சென்று வாக்குமூலம் பெற்றமை நீதித்துறைக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகும். இவரைக் கைது செய்து நாட்டுக்குக் கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
அசாத் மௌலானா வழங்கியதாகக் கூறப்படும் எவ்வித ஆதாரங்களிலும் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மேலும், முன்னைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவும் அசாத் மௌலானாவின் கருத்துக்களில் அறிவியல் பூர்வமான உண்மைத்தன்மை இல்லை என்று தெளிவாகத் தெரிவித்துள்ளன. அரசாங்கம் தமது இயலாமையை மறைக்கவும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைச் சரியாகக் கையாள முடியாமலும், ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவும் மேற்கொள்ளும் திட்டமிட்ட நாடகங்களாகும்.
சுரேஷ் சலே தற்போது போதிய அடிப்படை சுகாதார வசதிகள் அல்லது அமைதியான சூழல் வழங்கப்படவில்லை. அவர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார். அவரது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதற்குத் தற்போதைய அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.





