பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து சிறையிலிருந்து விடுதலையானார் சரித் அபேசிங்க!

ஆரம்பத்தில் பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரனை தொகுதி முன்னாள் அமைப்பாளர் சரித் அபேசிங்க, உரிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ததையடுத்து இன்று (30) வியாழக்கிழமை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித்த ராஜபக்‌ஷ, சரித் அபேசிங்க மற்றும் இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருண ஸ்ரீ வருஷஹென்னடிகே ஆகிய மூவருக்கும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (28) பிணை அனுமதி வழங்கியது.

நீதிமன்ற உத்தரவையடுத்து ரகித்த ராஜபக்‌ஷ மற்றும் அருண ஸ்ரீ வருஷஹென்னடிகே ஆகியோர் அன்றைய தினமே பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து விடுதலையாகினர்.

எனினும், சரித் அபேசிங்கவால் அன்றைய தினம் பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போனதால், அவர் மீண்டும் சிறைக்காவலில் வைக்கப்பட்டார். இன்றையதினம் அந்நிபந்தனைகள் நிறைவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தக்க விக்ரமரத்னவை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலிலிருந்து விடுவித்து, பாதுகாப்பான சிறைக்கு மாற்றுவதற்கு வசதி செய்து தருவதாகக் கூறி, அவரது மனைவியிடம் இருந்து ரூ. 120 மில்லியன் இலஞ்சம் பெற்றதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.