சிறிலங்கா ஜனாதிபதிக்கும், மலையக கட்சிகளுக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய வம்சாவளி மலையக கட்சிளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் 11ம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்திப்பை நடத்த, ஜனாதிபதி செயலகம் விடுத்த அழைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

12ம் திகதி நுவரெலியாவில், தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையகம்-200 தொடர்பில் நடத்த உள்ள, “நாம் இலங்கையர்” பேரணி காரணமாக, கூட்டணி எம்பிகள் 11ம் திகதி கொழும்பில் இல்லாத காரணத்தாலும், 10ம் திகதி, பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைத்துள்ள முழுநாள் விவாதம் காரணமாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், உசிதமான தினத்தை கலந்தாலோசனையின் பின் தெரிவிப்பதாக ஜனாதிபதி செயலகம் தனக்கு அறிவித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.