செம்மணி புதைகுழியில் குழந்தையின் எச்சம் உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்வு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 18ஆம் திகதி வியாழக்கிழமை ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 28ஆம் நாள் அகழ்வு பணிகள் வியாழக்கிழமை (18) நடைபெற்றது.

சான்று பொருட்களாக சிறு பாசிமணி துண்டு , கை வளையல், ஆணிகள் பிளாஸ்ரிக் என்பவை மீட்கப்பட்டுள்ளது.

அதவேளை பாரிய உலோக துண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதற்குள் என்புக்கூடுகள் காணப்படுவதனால், அதனை பக்குவமாக சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 387 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 367 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை நாளைய தினம் வெள்ளிக்கிழமை நீதி அமைச்சர் உள்ளிட்ட விசேட குழுவினர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் ஆணையாளர்கள் உள்ளிட்ட குழுவினரும் புதைகுழி  அகழ்வு பணிகளை பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.