தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 619 சந்தேகநபர்கள் கைது

முழு நாடுமே ஒன்றாக என்ற நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய நேற்று  (8) சனிக்கிழமை மாத்திரம் 619 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு என்ற தொனிப்பொருளின் கீழ் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நேற்று முன்தினம் சனிக்கிழமை நாடு முழுவதும் சுமார் 625 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார், 619 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

மேற்படி நடவடிக்கைகமைய 1 கிலோ 660 கிராம் ஐஸ் போதைப்பொருள், 190 கிராம் ஹெரோயின், 686 கிராம் கஞ்சா மற்றும் 982 போதை மாத்திரைகள் ஆகியன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் கைதான 5 பேருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு அமையானவர்கள் என அடையாளம் காணப்பட்ட 2 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.