நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றது.
வளிமண்டலவியல் திணைக்கள பிரிதிநிதிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. எதிர்வரும் சில நாட்களுக்கு சீரற்ற காலநிலை நிலவினால் பரீட்சை பணிகளை தடையின்றி முன்னெடுப்பது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இன்று (06) நாளை மற்றும் 8 ஆம் திகதிகளில் மழைக்காலநிலை நிலவினால் பரீட்சைப் பணிகளுக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் செயல்பாட்டு அறையில் விசேட பிரிவொன்றை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, வெள்ளப்பெருக்கு ஏற்படுமாயின் அதற்காகப் படகுகள் மற்றும் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, 2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 09 ஆம் திகதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





