கடமையை செய்ய தவறியமைக்காக முன்னாள் பொலிஸ் மாஅதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு மரண தண்டனை தீர்ப்பளித்தது போன்று கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீரை வெளியேற்றி பல உயிர்கள் பலியாவதற்கு காரணமான பொறியியலாளர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைக்கு அவர்களுக்கு தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அதேநேரம் 2.5 மில்லியன் டொலர் நிதி காணாமல் போன விவகாரத்தில் மத்திய வங்கிக்கு தனது பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (5) இடம்பெற்ற திறைசேரியினால் வெளிநாடொன்றுக்கு செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் நிதி காணாமல் போன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
2.5 மில்லியன் டொலர் நிதி காணாமல் போன விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சும் மத்திய வங்கியும் ஆளுக்கு ஆள் பந்தை எரியும் நடவடிக்கையே காணக்கூடியதாக இருக்கிறது. இதனை அரசாங்க நிதி பற்றிய குழுவிலும் அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பில் கேள்விகளை எழுப்பும்போது எங்களுக்கு அவதானிக்க முடியுமாக இருந்தது. தங்கள் பொறுப்புக்களில் இருந்து விலகிக்கொள்ளவே நடவடிக்கை எடுத்துவந்தார்கள்.
பண பரிமாற்றல் சட்டத்தின் பிரகாரம் நாட்டுக்குள் இடம்பெறும் பணப்பரிமாற்றங்கள் இடம்பெறும்போது அதற்கு மத்திய வங்கிக்கும் பொறுப்பு இருக்கிறது. இந்த சட்டத்தின் பிரகாரம் தற்போது இடம்பெற்றுள்ள 2.5 மில்லியன் டொலர் நிதி காணாமல் போன விவகாரம் தொடர்பில் சட்ட மாஅதிபர் திணைக்களத்திடம் விளக்கம் கேட்டபோது, இதற்கு மத்திய வங்கிக்கியும் பொறுப்பு கூறவேண்டும் என உறுதிப்படுத்தி இருக்கிறது. அதனால் இந்த விவகாரத்தில் மத்திய வங்கிக்கு நழுவிட முடியாது. அவர்கள் தங்களின் பொறுப்பை சரியான முறையில் நிறைவேற்ற தவறி இருக்கிறார்கள் என்பது புரிகிறது. எனவே மத்திய வங்கி தனது பொறுப்பில் இருந்து தப்பிச்செல்ல முடியாது.
அதேநேரம் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கண்டி மாவட்த்தில் பல இடங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கொத்மலை அணைக்கட்டின் நீர் மட்டம் 700 மி.லி. அளவுக்கு 98.7 வீதம் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அணைகட்டை சுற்றியுள்ள அங்குள்ள மக்கள் மிகவும் பீதியில் இருக்கிறார்கள். அதேபோன்று நாவலப்பிட்டி நகரமும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. தித்வா அனர்த்தத்தின்போதும் இந்த நிலையே காணப்பட்டது.
அத்துடன் 6, 7ஆம் திகதிகளில் மீண்டுமொரு சூறாவளி ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டிருக்கிறது. அதனால் நிரந்தரமாக இந்த பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க ஒரு பொறிமுறை தேவையாகும். கெலிஓயா நகரம் இந்த முறையும் பல அடி உயரத்துக்கு நீரில் மூழ்கியது. அந்த இடங்களில் தரமற்ற முறையில் கட்டிடங்கள் கட்டப்படுவதே இதற்கு காரணமாகும். அதனால் இது தொடர்பில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு மாத்திரமல்ல, நாவலப்பிட்டிய நகரின் வடிகாலமைப்பு திட்டம் முற்றாக தோல்வியடைந்துள்ளது. கொத்மலை நீர் தேக்கத்தில் இருந்து, இந்த முறை நீரை படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தித்வா அனர்த்தத்தின் போது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரே தடவையில் நீரை திறந்துவிட்டதாலே, அன்று நாவலப்பிட்ட உள்ளி பிரதேசங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிர் சேதங்கள் இடம்பெற காரணமாகும்.
எனவே கடமையை செய்ய வதறியமைக்காக முன்னாள் பொலிஸ் மாஅதிபர், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மரண தண்டனைக்கு ஆளாகும்போது, கொத்மலை நீர்த்தேக்கத்தின் பொறியியலாளர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைக்கு அவர்களுக்கு தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும் என்றார்.





