பாளையங்கோட்டையில் மனநல மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர் தனது தந்தையின் உறுதுணையுடன் முதல் வாக்குரிமையை செலுத்தி, ஜனநாயக கடமையை நிறைவேற்றியிருப்பது கவனம் ஈர்த்தது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாளையங்கோட்டை இஞ்ஞாசியார் தொடக்கப் பள்ளியில் மனநல மாற்று திறனாளி இளைஞரான 24 வயது மாரிக்கண்ணன் தனது வாக்குரிமையை செலுத்திவிட்டு மகிழ்வுடன் அழியாத மை வைத்த விரலினை காண்பித்தார்.

மாரிக்கண்ணன் தனது முதல் வாக்குரிமையை செலுத்தினார். இவரது தந்தை நாராயணன் கூலி வேலை செய்கிறார். தனது மகனும் எல்லோரையும் போல இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் என்று அவருக்கு வாக்காளர் உரிமையைப் பெற்றுக் கொடுத்து, அவரை தனது கடமையாற்ற உறுதுணையாக இருந்திருக்கிறார். இதனை அவர் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார். வாக்களித்து விட்டு அவர் எல்லோருக்கும் தனது இன்முகத்துடன் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்தார்.





