கிரிஷ் நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் மே மாதம் 29ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கானது இன்று வியாழக்கிழமை (23) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதியான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இரு தரப்பு விசாரணைகளின் பின்னர் வழக்கை மே 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொண்டு, நம்பிக்கை துரோகம் இழைத்ததாகக் குற்றம் சுமத்தி சட்ட மா அதிபரினால் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





