தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி விடுத்த எச்சரிக்கை

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உயர் தலைவர் அலி கமேனியின் மறைவிற்குப் பழிவாங்குவது உறுதி என அவரது மகனும், தற்போதைய உயர் தலைவருமான மொஜ்தபா கமேனி சபதம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “கமேனி மற்றும் தியாகிகளின் இரத்தத்திற்குப் பழிவாங்குவது தனிப்பட்ட நபர்களைச் சார்ந்தது அல்ல, அது தவிர்க்க முடியாத வகையில் நிச்சயம் நிறைவேற்றப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் மஷ்ஹத் நகரில் நடைபெற்ற அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட நிலையில், மக்களுக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையில், தன்னை படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இஸ்ரேலிய உளவு அமைப்புகளின் தகவல்களை மேற்கோள் காட்டி ட்ரம்ப் இதனை கூறி வரும் போதிலும், அமெரிக்க உளவு அமைப்புகள் இதுவரை இந்த அச்சுறுத்தலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக நேட்டோ மாநாட்டிற்குப் பிறகு ட்ரம்ப் தனது பயணத் திட்டங்களை மாற்றியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.