“தூக்கமே தேவையற்றது என ஒரு காலத்தில் நினைத்தேன்”

வாழ்வில் தூக்கம் என்பது சோம்பல் என்றும், அது தேவையற்றது என நான் எனது இளம் வயதில் நினைத்தேன்” என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் அவர் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் பில் கேட்ஸ். மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். 67 வயதான அவர் கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் சிறப்பிடத்தில் இருந்தவர். உலகம் முழுவதும் அறியப்படுகின்ற செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார் பில் கேட்ஸ். இப்போது கூட உலக பணக்காரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 134 பில்லியன் டாலர்கள். தனது சொத்துகளை தானமாக வழங்குவது குறித்து கடந்த ஆண்டு பேசி இருந்தார்.

“என்னுடைய 30 மற்றும் 40 வயதுகளில் தூக்கம் குறித்து நாங்கள் இப்படி பேசிக்கொள்வோம். ஒருவர் நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் தூங்குவதாகச் சொல்வார். அவரை இடைமறித்து பேசும் மற்றொருவர் தான் 5 மணி நேரம் மட்டுமே தூங்குவதாக சொல்வார். அதை கேட்டு நான் வியந்தது உண்டு. அப்போது தூக்கம் என்பது சோம்பல் மற்றும் தேவையற்றது என நினைத்திருக்கிறேன். அதனால், குறைந்த அளவு தூங்கவும் முயற்சி செய்திருக்கிறேன்” என சக ஊழியர்களுக்கு இடையிலான உரையாடலை பில் கேட்ஸ் பகிர்ந்துள்ளார்.

ஆனால், பின்னாளில் தூக்கம் குறித்த தனது எண்ணத்தை அவர் மாற்றிக் கொண்டுள்ளார். “இப்போது என்னவென்றால் ஆழ்ந்த உறக்கம் ஆரோக்கியத்துக்கு அவசியம் என நாம் அறிகிறோம். அது இளம் வயதினருக்கும் அவசியம் தேவை” என அவர் தெரிவித்துள்ளார்.