தேர்தலில் போட்டியிடுவதற்கான தடையை மேல்முறையீட்டு நீதிமன்றம் குறைத்ததைத் தொடர்ந்து, பிரான்சின் தீவிர வலதுசாரித் தலைவரான Marine Le Pen தனது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
பிரான்சின் வாக்காளர்களே தமது எதிர்காலத்தை முடிவு செய்வார்கள் என பதிவு செய்துள்ள Marine Le Pen, மற்றவர்களைப் போலவே எனது உரிமைகளைப் பயன்படுத்தும் ஒரு குடிமகள் என்று அவர் புதன்கிழமை கூறியுள்ளார்.
அடுத்த வசந்த காலத்தில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தைப் பாதிக்கும் என்று அவரது அரசியல் எதிரிகள் கூறிய சட்டச் சிக்கல்களைப் புறந்தள்ளும் வகையில் அவரது பதில் அமைந்திருந்தது.
செவ்வாயன்று, போலி வேலை மோசடியை அரங்கேற்றுவதில் முக்கியப் பங்கு வகித்ததற்காக Le Pen-க்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.
2004 மற்றும் 2016 க்கு இடையில் ஐரோப்பிய பாராளுமன்ற நிதியில் 2.8 மில்லியன் யூரோவுக்கு மேல் மோசடி செய்ததாகவும், பாரிஸில் உள்ள தனது கட்சிக்கு அப்பணத்தை அவர் செலவிட்டதற்கும் Le Pen குற்றவாளி என்று கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்கான தடை குறைக்கப்பட்டதன் மூலம் அவருக்கு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உருவானாலும், அதே வேளையில் அவருக்கு ஓராண்டு கால சிறைத்தண்டனை போன்றதொரு தண்டனையும் விதிக்கப்பட்டது;
இதன்படி, அவர் தனது வீட்டிற்குள்ளும் வீட்டிலிருந்து வெளியேறும் இடங்களுக்கும் மட்டுமே தனது நடமாட்டத்தை மட்டுப்படுத்தும் வகையிலான மின்னணு கணுக்கால் கருவியை அணிய வேண்டியிருக்கும்.
இந்தத் தீர்ப்பு அவரது பிரச்சார நடவடிக்கைகளுக்குச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும்; இத்தகைய கட்டுப்பாடுகளின் கீழ் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் முன்னரே கூறியிருந்தார்.

ஆனால், சட்ட ரீதியான ஒரு அம்சத்தின் அடிப்படையில் பிரான்ஸின் மிக உயர்ந்த நீதிமன்றமான Court of Cassation இல் மேல்முறையீடு செய்யப்போவதாக Le Pen புதன்கிழமை தெரிவித்தார்.
மட்டுமின்றி, அவர் மேல்முறையீடு செய்யும் காலத்தில், அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்படும். இதன் மூலம், மின்னணு அடையாளக் கருவி அணியாமலேயே அவரால் நடமாட முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சட்டப் பாதுகாப்பு
ஆனால், Le Pen தொடர்பான சட்டரீதியான நிச்சயமற்ற தன்மையும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ள இரு சுற்றுத் தேர்தல்களின்போது அவர் மின்னணு கணுக்கால் கருவியை அணிய வேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதுமே தற்போது பிரெஞ்சு அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் விவகாரங்களாக உள்ளன.
சரியான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி நீதிமன்றம் Le Pen-க்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தால், அவர் மற்றொரு விசாரணையை எதிர்கொள்ள நேரிடும். ஆனால், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஒரு புதிய விசாரணையை ஏற்பாடு செய்யப் போதுமான நேரம் இருக்காது.

மாறாக, Le Pen-க்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்து, சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாக முடிவு செய்தால், அவரது குற்றத்தீர்ப்பும் தண்டனையும் இறுதியானதாகிவிடும். அதாவது, தேர்தலுக்கு முந்தைய வாரங்களில் தனது தண்டனைக் காலத்தை கணுக்கால் கருவியுடன் தொடங்க வேண்டிய சூழலை அவர் எதிர்கொள்ள நேரிடலாம்.
இருப்பினும், மின்னணு கண்காணிப்பு ஏற்பாடுகளைச் செய்து அதைச் செயல்படுத்தும் செயல்முறைக்கு பெரும்பாலும் பல மாதங்கள் ஆகலாம்; இதனால், கணுக்கால் கருவி இல்லாமலேயே அவர் ஜனாதிபதி பதவியை அடையக்கூடிய சூழல் ஏற்படலாம்.
மேலும், மின்னணு கருவி பொருத்தப்படுவதற்கு முன்பாகவே மே மாதத்தில் Le Pen ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால், அவர் தனது பதவிக்காலத்தில் ஜனாதிபதிக்கான சட்டப் பாதுகாப்பைப் பெறுவார்; மேலும், பதவியிலிருந்து விலகும் வரை அவர் அந்தக் கருவியை அணிய வேண்டியிருக்காது.





