7 மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த ஆஸ்திரேலிய பெண் உயிர் பிழைத்தார்!

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரத்தில் 7 மாடி அடுக்கு கொண்ட கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்த சம்பவம் நடந்துள்ளது.

கடந்த ஜூலை 29-ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் டோமினி ரெய்ட் என்ற பெண் ஒருவர் தனது விட்டின் 7-வது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். ஏறக்குறைய 21 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஏராளமான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. பலத்த காயங்கள், எலும்பு முறிவுகளுடன் உயிர் பிழைத்துள்ள ரெய்ட், தற்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இது குறித்து அவரது தந்தை பிராட் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “வாரம் முழுவதும் நடந்த அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு அதிசயமான முறையில் ரெய்ட் உயிர் பிழைத்துள்ளார்” என்று கூறியுள்ளார். இந்த விபத்துக்கான காரணம் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை. ரெய்ட் பேசத் தொடங்கிய பிறகே இது பற்றி தெரியவரும் என்று கூறப்படுகிறது.

மேலும், சிகிச்சை செலவுக்கு அதிக பணம் தேவைப்படுவதால் கிரவுட் ஃபண்டிங் முறையில் பொதுமக்களிடம் அவரது பெற்றோர் உதவி கோரியிருந்தனர். இதன் மூலம் ரெய்டின் சிகிச்சைக்கு இதுவரை ரூ.26 லட்சம் கிடைத்துள்ளது.