அரசாங்கத்தின் தற்போதைய தீர்மானங்களே நாட்டின் எதிர்கால வெற்றியைத் தீர்மானிக்கும்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி கடந்த மூன்று தசாப்தகாலமாக நிலையற்றதாகக் காணப்படுவதற்கு நிர்வாக சீர்கேடுகளே பிரதான காரணமாகும். எனவே நாடு முன்னேறவேண்டுமாயின், அரசாங்கம் குறுங்கால நெருக்கடி முகாமைத்துவத்திலிருந்து விலகி, நீண்டகாலத் திட்டமிடலில் கவனம் செலுத்தவேண்டும். தற்போதைய தீர்க்கமான கட்டத்தில் மேற்கொள்ளப்படும் சரியான தீர்மானங்களே எதிர்வரும் தசாப்தத்தில் நாட்டின் வெற்றியைத் தீர்மானிக்கும் என ‘வெரிட்டே ரிசேர்ச்’ அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி நிஷான் டி மெல் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு மீட்சி சார்ந்த கதையாடல்களுக்கு அப்பால், ஒரு முறையான அபிவிருத்தித் திட்டமிடல் அவசியம் என வலியுறுத்தி நிஷான் டி மெல் எழுதியிருக்கும் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

கடந்த 30 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலையற்றதாகக் காணப்படுவதற்கு நிர்வாக சீர்கேடுகளே பிரதான காரணமாகும். குறிப்பாக 2022 ஆம் ஆண்டு நாடு முகங்கொடுக்க நேர்ந்த பொருளாதார நெருக்கடியானது நிதிப்பற்றாக்குறை மக்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை உணர்த்தியது. எனவே தற்போதைய நிலையிலிருந்து நாடு முன்னேறவேண்டுமானால், வெறுமனே கடன்மறுசீரமைப்புடன் நின்றுவிடாமல், முறையான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களையும், ஊழலற்ற நிர்வாகத்தையும் உறுதிப்படுத்தவேண்டும்.

அரசாங்கம் ‘குறுங்கால நெருக்கடி முகாமைத்துவத்திலிருந்து’ விலகி, ‘நீண்டகாலத் திட்டமிடலில்’ கவனம் செலுத்தவேண்டும். சீரான பேரண்டப்பொருளாதார நடவடிக்கைகள், ஏற்றுமதித்துறையை வலுப்படுத்தல், செயற்திறன்மிக்க கொள்கை வகுப்பு மற்றும் முறையான கட்டமைப்பு மறுசீரமைப்புக்கள், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகளின் ஊடாகவே நாட்டை பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பலப்படுத்தமுடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் சாதாரண மக்களின் வருமானம் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்தாத எந்தவொரு வளர்ச்சியும் முழுமையானதல்ல. இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வருங்காலங்களில் டிஜிட்டல் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் காலநிலை மாற்றம் என்பன சார்ந்து ஏற்படக்கூடிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக்கூடியவகையில் நாட்டின் நிர்வாகக்கட்டமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும். தற்போது இலங்கை ஒரு தீர்க்கமான கட்டத்தில் இருக்கிறது. இவ்வேளையில் மேற்கொள்ளப்படும் சரியான தீர்மானங்களே எதிர்வரும் தசாப்தத்தில் நாட்டின் வெற்றியைத் தீர்மானிக்கும்.