இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் (வயது 21) சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்தமை தொடர்பில் இளம்பெண்ணின் தந்தை, தனது மகளின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்து, இம்மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மருத்துவத் தரப்பினரின் அலட்சியம் மகளின் மரணத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
சுகாதார அமைச்சுக்கு இளம்பெண்ணின் தந்தை எழுதிய கடிதத்திலேயே இந்த விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்ணின் தந்தை எழுதிய அக்கடிதத்தில் உள்ள மேலதிக விடயங்களாவன,
நிமோனியாவால் பாதிக்கப்பட்ட தனது மகள், கடந்த 3ஆம் திகதி இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் 13வது வார்டுக்கு மாற்றப்பட்டார்.
குடும்ப உறுப்பினர்கள் பல தடவை கோரியும், மகளுக்கு சிகிச்சை அளித்த ஆலோசகர், மருத்துவ அதிகாரிகள், தாதியர் முதலியோரால் மகள் உரிய முறையில் நோய் நிலைமை குறித்து பரிசோதிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள தந்தை, மகளுக்கு ஏற்பட்ட கடுமையான நெஞ்சு வலி, வாயிலிருந்து இரத்தம் வடிதல், தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு, கடும் மூச்சுத்திணறல் போன்றவற்றுக்கும் உரிய மருத்துவ நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாளன்று அவரது ஒட்சிசன் அளவு 85 சதவீதமாகக் குறைந்ததாகவும், ஒட்சிசன் வழங்குவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், அது குறித்து நிபுணத்துவ மருத்துவருக்கு உடனடியாகத் தெரிவிக்கப்படாமலும், அவசர சிகிச்சைக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாமலும் இருந்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மகளின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து, வார்ட்டிலேயே மகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னரே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டு, அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், உடற்கூறாய்வு பரிசோதனை (Histopathological examination) எடுக்கப்படவிருக்கும் நிலையில், நியூமோனியாவே தற்காலிக மரணத்துக்கான காரணம் என நீதித்துறை மருத்துவ அதிகாரி தெரிவித்ததாக தந்தை கூறியுள்ளார்.
எனவே, நோயாளியின் மருத்துவக் குறிப்புகள், தாதியர் குறிப்புகள், கண்காணிப்பு அட்டவணைகள், மருந்துப் பதிவுகள் மற்றும் பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்யவும், முறையான கண்காணிப்பு மற்றும் அவசர சிகிச்சை நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதை ஆராயவும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் தாதியர், ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவத் தரநிலைகள் பராமரிக்கப்பட்டுள்ளதா என்பதைத் தீர்மானிக்கவும் ஒரு சுதந்திரமான விசாரணைக் குழுவை நியமிக்குமாறு அவர் சுகாதார அமைச்சிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இளம்பெண்ணின் மரணம் தொடர்பான சரியான, முறையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பெண்ணின் தந்தை, உரிய அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சினைக் கோரியுள்ளார்.



