மண்டபம் அடுத்துள்ள ஐயன் தோப்பு தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 10 வயது மதிக்கத்தக்க ஆண் கடல் பசுவை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின் வனத்துறையினர் கடற்கரை மணலில் புதைத்தனர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான கடல் பல்லி, கடல் குதிரை, கடல் பசு, சிப்பி, சங்கு, பவளப்பாறைகள் என சுமார் 1400 க்கும் அதிகமான அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வலைகளில் சமீப காலமாக கடல் ஆமை, கடல் பசு, டொல்பின்கள் சிக்குகின்றன.
இந்நிலையில் இன்று (18) மண்டபம் அடுத்த ஐயன் தோப்பு தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரையில் இறந்த நிலையில் 10 வயது மதிக்கத்தக்க ஆண் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியதை கண்ட மீனவர்கள் மண்டபம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினர், உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசுவை ஆய்வு செய்தனர்.
பின்னர், உடற்கூறாய்வுக்காக கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆய்வில், குறித்த கடல் பசு சுமார் 800 கிலோ எடை கொண்டதாகவும், அதன் அகலம் 115 செ.மீ மற்றும் சுற்றளவு 230 செ.மீ எனவும் தெரியவந்துள்ளது.
வனத்துறையினர் தெரிவித்ததாவது, கடல் பசுவின் உயிரிழப்பிற்கான துல்லியமான காரணம் உடற்கூறாய்வுக்குப் பின்னரே உறுதியாகத் தெரியவரும். இது மீன்பிடி படகின் அடிப்பகுதியில் உள்ள இரும்பு விசிறி தாக்கத்தால் ஏற்பட்டதா அல்லது வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள், உயிரிழந்த கடல் பசுவுக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். அதன் பின்னர், வனத்துறையினர் கடற்கரை மணலில் புதைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.



