களு கங்கை, களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவை அண்டிய பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (16) பதிவான மழைவீழ்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் களு கங்கை தாழ்நிலப் பகுதிகளில் 50 முதல் 75 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதுவே நேற்று தாழ்நிலப் பகுதிகளில் பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சியாகும்.
அத்தனகலு ஓயா மற்றும் களனி கங்கை என்பவற்றில் சில இடங்களில் 60 முதல் 70 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
ஏனைய ஆறுகளின் தாழ்நிலப் பகுதிகளில் மழைவீழ்ச்சியானது 25 மில்லிமீற்றருக்கும் குறைவாகவே காணப்பட்டது.
அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் தற்போது உயர்மட்டத்தில் காணப்பட்ட போதிலும், அது மெதுவாகக் குறைவடைந்து ‘அவதான நிலையை’ எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
களு கங்கையின் கிளை ஆறான குடா கங்கையின் நீர்மட்டம் இன்னும் ‘சிறிய அளவிலான வெள்ள’ மட்டத்திலேயே காணப்படுகின்றது.
இதன்படி தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் ஆறுகளின் நீர்மட்டம் குறித்து தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.



