காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP)காணாமல் போன நபர்களுடைய குடும்பங்களினை வலுப்படுத்துவதற்கும் OMP ஆணையினை சிறப்பாக நிறைவேற்றுவதற்குமான கூட்டாண்மைகளை ஏற்படுத்துவதற்கு சமூக அமைப்புக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது.
விசாரணைக் குழுக்களால் வழங்கப்படும் பரிந்துரைகளைத் திறம்படச் செயற்படுத்துவதற்கு, காணாமல் போனோர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தேவைகள் குறித்த ஒரு முழுமையான புரிதல் தேவைப்படுகிறது.
இந்த நோக்கத்திற்காக, OMP யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகளுடன் ஒரு கலந்தாய்வு நிகழ்வினை காணமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக தலைமையக அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இன்றைய தினம் (23.04.2026) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புக்களுக்கு காணாமல் போனவர்கள் அலுவலகத்தின் (OMP) சட்டத்தின் அம்சங்கள், சிவில் அமைப்புக்களின் பங்களிப்புகள் மற்றும் OMP யுடன் கூட்டாண்மையை வலுப்படுத்தும் வழிகள் குறித்து தெளிவூட்டல்களை வழங்கி வழிகாட்டுவதே இக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.
இக் கலந்தாய்வில் பின்வருவோரால் பின்வரும் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
01.காணாமல் போனோர் அலுவலகத்தின்(OMP) பங்கு, அதிகாரம் மற்றும் முன்னேற்றம் தொடர்பாக ஏ. என். நுவான் தெளிவூட்டல் வழங்கினார்.
02. காணாமல் போனவர்கள் பிரச்சினைகள் குறித்த கண்ணோட்டம், தற்போதைய நிலைமை மற்றும் புள்ளிவிவரங்கள் குறித்தும் உறுப்பினர் மீராக் ரஹீம் தெளிவூட்டல் வழங்கினார்.
03. காணாமல் போன நபர்களின் குடும்பங்களின் தேவைகளை OMP பிரதிநிதியால் கண்டறிந்து புரிந்துகொள்ளுதல் தொடர்பாக உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தெளிவூட்டல் வழங்கினார்.
04.காணாமல் ஆக்கப்பட்டமைக்கான சான்றிதழ் மற்றும் மரணச் சான்றிதழ் தொடர்பான விளக்கத்தினை வடமாகாண பிரதி பதிவாளர் நாயகம் செல்வி ஆனந்தி ஜெயரத்னம் தெளிவூட்டல் வழங்கினார்.
மேலும், உளவியல், சமூக மற்றும் பொருளாதாரத் தேவைகள் குறித்து விரிவான கலந்துரையாடப்பட்டதுடன், இது கேள்வி பதிலுடன் கூடிய கலந்துரையாடலாகவும் அமைந்திருந்தது.
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்து சிவில் சமூக அமைப்புகள் கலந்துரையாடுவதற்கான தனி அமர்வுகளாகவும் அமைந்திருந்ததுடன், OMP பிரதிநிதியின் ஒத்துழைப்பு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாகவும் கலந்தாய்வு நடைபெற்றது.
இக் கலந்தாய்வில் திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன், காணாமல் போன ஆட்கள் அலுவலகத்தின் பிராந்திய இணைப்பாளர் த.செல்வகுமார், அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ந.தயாபரன், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ம கண்ணதாசன், திருமதி. சிவாஜினி புலேந்திரகுமார், திருமதி திவ்யா கஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலகர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் தேசிய நல்லிணக்க அபிவிருத்தி உத்தியோகத்தவர்கள் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.





