பாதாள உலகக்குழுத்தலைவர் பாணந்துறை குடு சலிந்துவின் உதவியாளரின் பெருந்தொகை சொத்துக்கள் இன்று (05) முடக்கப்பட்டுள்ளன.
இவர் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பாணந்துறை குடு சலிந்துவின் (சலிந்து மல்சித்த) பிரதான உதவியாளரான துபாய் அசிதா, போதைப்பொருள் வலையமைப்பின் மூலம் சம்பாதித்ததாகக் கூறப்படும் சொத்துக்களை முடக்கியுள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ரூ. 40 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்கள், இரண்டு மாடி வீடு, 10 பேர்ச் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வரும் வீடு, 10 பேர்ச் நிலப்பரப்பு கொண்ட மற்றொரு காணி, சுமார் 106 கிராம் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் ரூ. 1 மில்லியன் மதிப்புள்ள பணம் ஆகியவை சொத்துக்களில் அடங்கும் என்று புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் பாதாள உலகக்குழுத்தலைவரான பாணந்துறை குடு சலிந்து வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளார்.
இவருடன் தொடர்புடையவர்கள் மற்றும் உதவியாளர்கள் அவ்வப்போது சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





