இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணைப் பணம் இணையவழி ஊடுருவல் மூலம் திருடப்பட்டுள்ளமை மற்றும் அது குறித்து நிதி அமைச்சு மௌனம் காப்பது நாட்டின் நிதிப் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடன் வழங்கியவர்களுக்கு ஐந்து முறை பணம் அனுப்பியும் அது போய்ச் சேராத நிலையில், நாடு ‘தொழில்நுட்பக் கடன் மீறல்’ நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள அவர், மார்ச் மாதமே இந்த மோசடி குறித்து குழு நியமிக்கப்பட்டிருந்தும், இவ்வளவு காலம் இந்த விவகாரம் பாராளுமன்றத்திற்கு மறைக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிதி மோசடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாராளுமன்றத்திற்கு வெளியே இந்த விடயத்தைப் பற்றிப் பேச வேண்டிய நிலை ஏற்பட்டமை உண்மையில் கவலைக்குரியதாகும். அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் என்ற முறையில், இது குறித்து பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கத் திட்டமிட்டிருந்த போதிலும், அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
திறைசேரியிலிருந்து கடன் தவணைப் பணம் செலுத்தப்பட்ட போது, இணையவழி ஊடுறுவல் ஊடாக நிதி திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்துத் தெளிவுபடுத்துமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பிய போதிலும், அக்கடிதத்துக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால் அது தொழில்நுட்பக் கடன் மீறலாக கருதப்படும் அபாயம் உள்ளது. ஐந்து முறை பணம் செலுத்தப்பட்டும், கடன் வழங்கியவர்களுக்குச் சேராததால் அவர்கள் இது குறித்துக் கேள்வி எழுப்பிய பின்னரே இந்த விவகாரம் வெளியில் தெரியவந்துள்ளது.
அரசியலமைப்பின் 148ஆவது பிரிவின்படி, நாட்டின் நிதி மீதான முழு அதிகாரமும் நிதி அமைச்சுக்கோ அல்லது நிதிக்குழுவுக்கோ அல்ல, பாராளுமன்றத்துக்கே காணப்படுகிறது. கடந்த மூன்று சந்தர்ப்ப ங்களில் நிதி அமைச்சின் அதிகாரிகள் நிதிக்குழுவின் கூட்டங்களுக்கு சமூகமளிக்காமல் தவிர்த்து வருகின்றனர். கசினோ ஒழுங்குமுறை, 2025-ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கை மற்றும் திறைசேரிக்கும் மத்திய வங்கிக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு தொடர்பான முக்கிய கூட்டங்களுக்கும் அவர்கள் சமூகமளிக்கவில்லை. நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதிக்கு இது குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் மூன்று ஆண்டுகள் கஷ்டப்பட்டு ஈட்டிய சர்வதேச நம்பிக்கையை இத்தகைய சம்பவங்கள் சீர்குலைத்துவிடக் கூடாது. அரச கடன் மேலாண்மை சட்டத்தின்படி, புதிதாக உருவாக்கப்பட்ட கடன் மேலாண்மை அலுவலகத்தின் மூலமே இத்தகைய கொடுக்கல் வாங்கல்கள் நடைபெற வேண்டும். ஆனால், அந்த அலுவலகத்திற்கு அனுபவம் இல்லாத நபர்களை நியமிக்க வேண்டாம் எனத் நாம் ஏற்கனவே எச்சரித்திருக்கின்றோம்.
சமூக வலைதளங்களில் பரவும் தனிப்பட்ட நபர்களின் கணக்குகளுக்குப் பணம் சென்றது போன்ற தகவல்கள் குறித்துத் நான் கருத்து வெளியிட விரும்பவில்லை. பொறுப்புள்ள ஒரு பதவியில் இருப்பதால் நிதி அமைச்சின் செயலாளரின் உத்தியோகபூர்வ பதிலுக்காகக் காத்திருக்கின்றேன். மார்ச் மாதமே இது குறித்து விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இவ்வளவு காலம் இந்த விடயத்தை மறைத்து வைத்திருந்தது ஏன்? நாட்டின் நிதிப் பாதுகாப்பு மற்றும் சர்வதேச ரீதியிலான நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்ட நிதி அமைச்சின் அதிகாரிகள் உடனடியாக உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.





