நவீனமயமாக்கல் பிரிவிற்கும், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

இலங்கையின் அரச வருமானக் கட்டமைப்பை நவீனமயமாக்கும் நோக்கில், ஜனாதிபதி செயலகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கும் அரச வருமான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் பிரிவிற்கும் (RARMB) சர்வதேச நாணய நிதியத்திற்கும் (IMF) இடையிலான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, கடந்த ஒரு வருட காலத்தில் இலங்கையின் வரிக் கட்டமைப்பு, சுங்க நடைமுறைகள், மதுவரி முகாமைத்துவம் மற்றும் ஒட்டுமொத்த அரச வருமான மாதிரிகள் ஆகியன மத்திய கால மூலோபாயத் திட்டத்தின் (MTRS – Medium Term Revenue Strategy) கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட மறுசீரமைப்புச் செயல்முறையை மீளாய்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கு இணங்க, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், நிதி அமைச்சு, இலங்கை சுங்கம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்களையும் நடத்தியது.

அதன்படி, டிஜிட்டல் திட்டங்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்திட்டங்கள், தரவு ஒருங்கிணைப்பை விரைவுபடுத்தல், மனிதவள மற்றும் தலைமைத்துவப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் வரி அடிப்படையை விரிவுபடுத்துவதற்கான நிலைபேறான வழிமுறைகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிறப்புக் கவனம் செலுத்தியதுடன், அந்தச் செயல்பாட்டில் RARMB பிரிவு “வலுவான ஆளுமைச் சட்டகத்தைக் கொண்ட மறுசீரமைப்பு மையம்” ஆகச் செயலாற்றியுள்ளமை பாராட்டப்பட்டது.

இதன்போது, இலங்கைச் சுங்கம், உள்நாட்டு இறைவரி மற்றும் மதுவரி ஆகிய திணைக்களங்கள் சார்பாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்திற்கு, சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்ச்சியான தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை உதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அரச வருமான சேகரிப்பை நவீனமயமாக்கல், வரி நிர்வாகத் திறனை மேம்படுத்தல், சட்ட மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து முகாமைத்துவம் செய்தல் ஆகியவையே 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில், அமைச்சரவை அங்கீகாரத்தின் கீழ் நிறுவப்பட்ட RARMB பிரிவின் முக்கிய நோக்கங்களாகும்.

அதன்படி, உள்நாட்டு இறைவரித் திணைக்கள மறுசீரமைப்புச் செயன்முறையின் கீழ், கட்டமைக்கப்பட்ட மறுசீரமைப்புகளாக அதன் கிளைகளை Medium Corporate, Metro மற்றும் Regional அலுவலகங்களாக மீண்டும் அமைத்ததன் பின்னர், வரி இணக்கப்பாட்டை 40–45% இலிருந்து 70–75% வரை உயர்த்திக் கொள்ள முடிந்துள்ளது.

மேலும், தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கை சுங்க சட்டத்தைத் திருத்துவதற்கான புதிய வரைவு தயாரிக்கப்பட்டு, சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக, வரி விகிதக் கட்டமைப்பை இலகுபடுத்துதல், காகிதமற்ற செயல்முறைகளை (Paperless process) அறிமுகப்படுத்துதல், ஏற்றுமதியாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல் போன்றனவும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அதேபோன்று, மதுவரித் திணைக்கள மறுசீரமைப்பின் கீழ் புதிய மதுவரி முகாமைத்துவக் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம், அந்தத் திணைக்களத்தின் செயற்பாடுகளை நவீனமயமாக்கும் பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

RARMB இன் கீழ், சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையே கூட்டு ஒருங்கிணைப்பு கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இதன் கீழ், தரவுப் பகிர்வு, கூட்டு அபாய முகாமைத்துவம், கூட்டுக் கணக்காய்வு மற்றும் இறக்குமதியாளர்களின் வரி இணக்கத்தன்மையை ஆய்வு செய்தல் ஆகிய பணிகள் ஒரே செயல்முறையின் கீழ் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அரச நிதி அலுவல்கள் திணைக்களத்தின் ஆண்ட்ரூ கில்லர் (Andrew Killer) தலைமையில், அரச வருமான முகாமைத்துவத் திட்ட முகாமையாளர் சிண்டி நெகஸ் (Cindy Negus), இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிட வரி ஆலோசகர் கிரெக் (Greg), கனேடிய தேசிய சிரேஷ்ட ஆலோசகர் பொப் ஹெமில்டன் (Bob Hamilton) ஆகியோரும், அரச வருமான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் பிரிவின் (RARMB) சிரேஷ்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகள்