உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக மத்திய அரசாங்கத்தின் அதிகார சபைகள் ஊடாக பறிக்கப்படுகின்றன. மத்திய அதிகார சபைகளுக்கு அதிக சட்ட அதிகாரங்களைக் கையளிப்பதன் வாயிலாக மாகாண நிரலுக்கள் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சுற்றுச் சூழல் சட்ட மூலம் தொடர்பில் மத்திய அதிகார சபையினால் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் நல்லூர் பிரதேச சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் உள்ளுராட்சி மன்றங்கள் சார்பாக தமது அபிப்பிராயத்தினை வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் முன்வைத்தார்.
அவர் மேலும், தற்போது அரசாங்கத்தினால் சுற்றுச் சூழல் சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இச் சட்ட மூலத்தின் வாயிலாக உள்ளுராட்சி மன்றங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச அதிகாரங்களும் மீள மத்திக்கு எடுக்கப்படுகின்றது. அரசியலமைப்புச் சட்டத்தின் 9 ஆவது அட்டவனையில் நிரலில் 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி விடயங்கள் ஜனநாயகத்திற்கும் சட்டத்திற்கும் புறம்பாக பறிக்கப்படுகின்றன.
கொண்டு வரப்படும் சட்டத்தின் பிரகாரம், சுற்றாடல் விடயத்தில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை உள்ளுராட்சி மன்றங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களில் திண்மக் கழிவு முகாமைத்துவத்திற்கான அளணியை நிரப்புவதற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை. கழிவகற்றும் வாகனங்களுக்கான அனுமதிகள் கிடப்பில் உள்ளன.
சில நியமத்துணைவிதிகளை நாம் உருவாக்கவதற்கு மாகாண சபையின்றி தடைகள் உள்ளன. இவ்வாறான நிலையில் முந்திக்கொண்டு அரசாங்கம் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களை பறிப்பது மட்டுமல்ல உள்ளுராட்சி மன்றங்களை செயலிழக்கச் செய்யம் வகையில் நீதிமன்றங்களில் நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றது. கண்டிக்கத்தக்கது.
இவ்வாறாகவே எமது அதிகாரங்கள் ராஜபக்சாக்களின் காலப்பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபை, கடலோரபாதுகாப்பு அதிகார சபைகள் ஊடாக பறிக்கப்பட்டது. தற்போது சுற்றாடல் அதிகார சபை ஊடாகப் பறிக்கப்படுகின்றது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.


