மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது மக்களின் அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்ட உரிமை என்பதை சிறிலங்கா ஜனாதிபதி எந்தத் தயக்கமும் இன்றி ஏற்றுக் கொண்டுள்ளார் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டணியான தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை சந்தித்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை (PCoTSP) ஜனாதிபதியையும் எதிர்க்கட்சித் தலைவரையும் சந்தித்த கலந்துரையாடல்கள் மிகவும் பயனுள்ளவையாக அமைந்தன. அவை அரசியலமைப்பின் இரண்டு அடிப்படைக் கொள்கைகள் தொடர்பாக அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் பொதுவான உடன்பாட்டுத் தளத்தை அடையாளம் காண உதவின.
முதலாவதாக, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது மக்களின் அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்ட உரிமை என்பதை ஜனாதிபதி எந்தத் தயக்கமும் இன்றி ஏற்றுக் கொண்டார்.
இரண்டாவதாக, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கும், அதில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்குமான தனது உறுதியான அர்ப்பணிப்பை எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் வலியுறுத்தினார்.
எனினும், உண்மையான சவால் இந்த உறுதிப்பாடுகளை நடைமுறை யதார்த்தமாக மாற்றுவதில்தான் உள்ளது. இந்த அரசியலமைப்பு வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேறும் வரை, எமது உறுதியான நிலைப்பாட்டிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். அவற்றை நனவாக்கும் எமது முயற்சிகளையும் கைவிட மாட்டோம்- என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





