நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைகள் நீண்ட காலமாக தாமதிக்கப்பட்டு வரும் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதற்கு அரசாங்கத்துக்கு தூண்டுதலாக அமைய வேண்டும் என்று தேசிய சமாதான பேரவை கூறியிருக்கிறது.
இது தொடர்பாக பேரவை வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையின் விபரம் வருமாறு;
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் 29 பேர் (ஏழு சிறை அதிகாரிகள் உட்பட) உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த துயரச் சம்பவம் அரசாங்கத்திற்கு விழித்தெழுவதற்கான அழைப்பாகும். இந்த பேரழிவு அலட்சியம், அரசியல் தோல்வி மற்றும் சமூக உதாசீனம் ஆகியவற்றினால் விளைந்த ஒன்றாகும்.
இத்தகைய பேரழிவுக்கான சூழ்நிலைகள் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் கீழ் பல தசாப்தங்களாகத் திரண்டிருந்த போதிலும், தற்போதைய அரசாங்கம் ஆபத்தை முன்கூட்டியே கணிக்கவும் வன்முறை வெடித்தவுடன் விரைவாகவும் திறமையாகவும் பதிலளிக்கவும், தனது பாதுகாப்பில் உள்ளவர்களின் உயிர்களைப் பாதுகாக்கவும் கடமைப்பட்டிருந்தது.
சிறைக்குள் ஏராளமான ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டமை குறித்து தனியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏனெனில் இது வன்முறையையும் குழப்பத்தையும் உருவாக்குவதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயலையே உணர்த்துகிறது. பொறுப்பில் இருந்தவர்களால் இந்த கடமை நிறைவேற்றப்படவில்லை, அதாவது உயிரைப் பாதுகாக்கும் தனது மிக அடிப்படையான கடமையில் அரசு தவறியுள்ளது.
இலங்கையின் சிறைச்சாலைகளில் நெரிசல், போதிய உள்கட்டமைப்பு வசதியின்மை, ஊழியர் பற்றாக்குறை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் வலைப்பின்னல்களின் செல்வாக்கு ஆகியவை நீண்டகாலமாக அடையாளம் காணப்பட்ட போதிலும், இந்த பிரச்சினைகளை கையாள்வதற்கு தொடர்ச்சியான நடவடிக்கைகள் அவசியமாகும்.
சிறைச்சாலைகளின் கொள்ளளவு சுமார் 10,000 கைதிகளுக்கு மட்டுமே உள்ள நிலையில், சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டின் இறுதியில் சுமார் 28,000 ஆக இருந்து இன்று 42,000 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் பிணை பெறுவதை மிகவும் கடினமாக்கும் வகையில், அதன் தாக்கங்களை ஆராயாமல் அரசாங்கம் சட்டத்தில் கொண்டு வந்த மாற்றம் இந்த சூழ்நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலை மாத்திரம் சுமார் 650 கைதிகளுக்காக கட்டப்பட்ட ஒரு வசதியில் சுமார் 2,600 கைதிகளைக் கொண்டிருந்தது. இந்தச் சூழ்நிலைகள் அவசரத் தடுப்பு நடவடிக்கைகளை அத்தியாவசியமாக்கின.
நெரிசலைக் குறைத்தல், புனர்வாழ்வை வலுப்படுத்துதல் மற்றும் சிறைச்சாலைகளை குற்றவாளிகள் மீண்டும் சமூகத்துடன் இணைவதற்கேற்ற நிறுவனங்களாக மாற்றுவது உட்பட அரசாங்கத்தின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளிக்கப்பட்ட சிறைச்சாலை சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசரத் தேவையை நீர்கொழும்பு சிறைச்சாலைத் துயரம் நிரூபிக்கிறது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த அமைப்பை மாற்றுவதற்கான ஆணையுடனேயே ஆட்சிக்கு வந்தது. மஞ பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைத்தமை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் ஊழல்களுடனான தொடர்புகளை கொண்டிருந்தமை என்று முன்னைய அரசாங்கங்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டதைப் போன்ற குற்றங்கள் அற்றதாக இருப்பது அற்ற ஒன்றாக இந்த அரசாங்கம் பரவலாகப் பார்க்கப்படுகிறது.இது இதன் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாகும்.
மற்றவர்களால் நம்பகத்தன்மையுடன் தொடர முடியாத சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை இது அரசாங்கத்திற்கு வழங்குகிறது. ஆனால் நேர்மை மட்டும் போதாது. அது நிர்வாகத் திறமை மற்றும் நீண்டகாலமாக வாக்குறுதியளிக்கப்பட்ட சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கான அரசியல் விருப்பத்துடன் பொருந்துவதாக இருக்க வேண்டும்.
அரசாங்கத்தால் ஒரு உயர் மட்ட அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது என்றாலும், அதன் கண்டுபிடிப்புகள் தீவிரமான, கட்டமைப்பு ரீதியான மாற்றங்களுக்கு வழிவகுக்க வேண்டும். சிறைக்கைதிகள் மற்றும் சிறைக்காவலர்கள் இருவருமே சிறை அமைப்பிற்குள் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பதால், நீதிக்காக அவசரமானதும் நன்கு வரையறுக்கப்பட்டதுமான நடவடிக்கைகள் அவசியமாகின்றன.
நீர்கொழும்பு சிறைச்சாலைத் துயரத்தை ஒரு திருப்புமுனையாகக் கருதுமாறு தேசிய சமாதானப் பேரவை அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. அர்த்தமுள்ள சிறைச்சாலைச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் நிறுவனத் தோல்விகளுக்கான பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் மக்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பரந்த சீர்திருத்தத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கும் அரசாங்கம் அவசரமாகச் செயல்பட வேண்டும்.





