ஹோமாகம – கட்டுவான தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை தீ விபத்தில் ஐவர் உயிரிழப்பு !

ஹோமாகம, கட்டுவான தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலையில் இன்று (21) செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், குறித்த தொழிற்சாலையிலிருந்து ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் காலை ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை பரவியதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

தீயை கட்டுப்படுத்துவதற்காக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே மாநகர சபையின் 5 தீயணைப்பு வண்டிகளுடன் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டதுடன் அவசரகால மீட்பு குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த தீ விபத்து தொடர்பில் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் மற்றும் சம்பவத்தின் முழுமையான விபரங்களை கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.