தேசிய பொசன் திருவிழாக் காலத்தில் அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை வரலாற்று சிறப்புமிக்க புனித ஸ்தலங்களுக்கு வருகை தரும் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக, வெளிமாவட்டங்களில் இருந்து பாதுகாப்புப் பணிக்காக வரும் பொலிஸ் அதிகாரிகளுக்குத் தங்குமிட வசதி அளிக்கும் வகையில், அநுராதபுரம் மற்றும் கலேன்பிந்துனுவெவ கல்வி வலயத்தில் உள்ள 12 பாடசாலைகளை ஜூன் 26ஆம் திகதி முதல் ஜூலை 2ஆம் திகதி வரை மூட வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அநுராதபுரம் கல்வி வலயத்தில் உள்ள ஒன்பது பாடசாலைகளும், கலேன்பிந்துனுவெவ கல்வி வலயத்தில் உள்ள மூன்று பாடசாலைகளுமே மூடப்படும்.
அநுராதபுர பொசன் திருவிழாவின் போது பாடசாலைகளை மூடுவது தொடர்பாக பொசன் ஏற்பாட்டுக் குழுவினால் வடமத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க இம்மாதம் 26ஆம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 2ஆம் திகதி வரை பொலிஸ் உத்தியோகத்தர்களது தங்குமிட வசதி கருதி பாடசாலைகளை மூடுவதற்கு மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய அநுராதபுரம் கல்வி வலயத்தில் உள்ள அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயம், வலிசிங்க ஹரிஷந்திர வித்தியாலயம், சுவர்ண பாலி பெண்கள் தேசிய பாடசாலை, தேவநம்பிய திஸ்ஸ மகா வித்தியாலயம், அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம், சாஹிரா தேசிய பாடசாலை, மஹாபோதி வித்தியாலயம், நிவத்தகசேத்திய தேசிய பாடசாலை, தந்திரிமலை விமலதான வித்தியாலயமும் கலன்பிந்துனுவெவ கல்வி வலயத்தில் உள்ள மிஹிந்தலை மகா வித்தியாலயம், மிஹிந்தலை கனிஷ்ட வித்தியாலயம், மிஹிந்தலை கம்மலங்குளம் வித்தியாலயம் உள்ளிட்ட பன்னிரண்டு பாடசாலைகளே மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


