2 கோடி ரூபாவுக்கு விற்பதற்காக வைத்திருந்த 4 கஜமுத்துக்களுடன் மூவர் கைது!

இரண்டு கோடி ரூபா பணத்துக்கு விற்பனை செய்யத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் 4 கஜமுத்துக்களுடன் 3 சந்தேக நபர்கள் அராவ, கரந்தகஹமட பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பிபில, மாத்தளை மற்றும் பகமூன ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 49, 31 மற்றும் 29 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஹாலிஎல, உடுவர முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று திங்கட்கிழமை (22) இந்தச் சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து “கஜமுத்துக்கள்” என சந்தேகிக்கப்படும் நான்கு துண்டுகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அராவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.