தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அரசாங்கத்தின் ‘முழு நாடும் ஒன்றாக’ போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக, இலங்கை கடற்படை கடல் எல்லை முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ், முப்படைகள், இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் வெளிநாட்டு உளவுத்துறையினரின் தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு கடும் பின்னடைவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, 2026 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கடல்சார் நடவடிக்கைகளில், 256.200 கிலோகிராம் கொக்கேன், 1,080.894 கிலோகிராம் ஹெரோயின், 667.695 கிலோகிராம் கேரள கஞ்சா, 590.806 கிலோகிராம் ஐஸ் மற்றும் 56.091 கிலோகிராம் ஹஷீஷ் ஆகிய பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளின் போது, போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பல உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகுகளும் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
நாட்டிற்குள் போதைப்பொருட்கள் ஊடுருவுவதைத் தடுக்கும் நோக்கில், கடத்தல்காரர்களுக்கு எதிரான கடல்சார் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும், போதைப்பொருளற்ற பாதுகாப்பான இலங்கையை உருவாக்கும் முயற்சியில் கடற்படை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



