இசைக்குயில் ஜானகி மறைவு! வைகோ இரங்கல்

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அனைவராலும் பாராட்டிப் புகழப்பட்ட இசைக் குயில் ஜானகி அம்மையார் தன் 88 ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக மைசூர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற செய்தி இடியென என்னைத் தாக்கிய நிலையில், நிலைகுலைந்து போய் துயரில் மூழ்கி உள்ளேன்.

கடந்த 50 ஆண்டுகளாக இரவிலும், பகலிலும், பயண நேரங்களிலும், துன்பம் சூழ்ந்த வேளைகளிலும் ஜானகி அம்மையாரின் தேனிசைப் பாடல்கள் எனக்கு அருமருந்தாக உதவின.

ஒன்பது வயதிலேயே மேடை ஏறிப் பாடிய ஜானகி, 18 வயதில் அகில இந்திய வானொலி நடத்திய போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று, குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களிடம் பரிசு பெற்றார்.

அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 17 மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களைப் பாடிய இமாலய சாதனையாளர் ஜானகி அம்மையார், நான்கு தேசிய விருதுகள், ஐந்து தமிழ்நாடு அரசின் விருதுகள், ஆந்திரா, கேரளா, ஒடிசா அரசுகளின் விருதுகள் என 33 விருதுகள் இவரைத் தேடி வந்து இசைப் புலமைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தது.

கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில் காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் நாதசுர இசையோடு போட்டி போட்டுக் கொண்டு சிங்கார வேலனே தேவா என்ற பாடல், இளையராஜாவின் இசையமைப்பில் அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற பாடல், இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன் என்ற அவரின் இன்னிசை, பொன்மேனி உருகுதே என்ற அவரின் காந்தக் குரல், மாத உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினோம் என்ற அவரின் காந்தக் குரல், தேன் சிந்துதே வானம் என்ற அவரின் இனிய பாடல், டாடி டாடி என்று மழலைக் குரலில் அவர் பாடிய பாடல் என இப்படி நூற்றுக் கணக்கான நம் நெஞ்சம் கவர்ந்த பாடல்களை நம்மால் எவ்வாறு மறக்க இயலும்?

1957 ஆம் ஆண்டு விதியின் விளையாட்டு என்ற திரைப்படத்தில் முதன் முதலாக ஒலித்த ஜானகியின் குரல் 60 ஆண்டுகளாக தொடர்ந்து ஒலித்து நம் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தது. காதல், தாய்மை, அன்பு, தமிழ் மொழியின் சிறப்பு என பல்வேறு பண்பு நலன்களை வலியுறுத்தும் அவரது பாடல்கள் நெஞ்சம் மறக்காத தேனிசைப் பாடல்கள் ஆகும்.

அவரின் இனிமையான பாடல்கள் காருள்ள வரை, கடல் நீருள்ள வரை, இவ்வையகம் உள்ளவரை நம் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவர் எந்நாளும் நம்மோடு வாழ்வார்!

அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரின் பிரிவால் துயரத்தில் மூழ்கி உள்ள குடும்ப உறவுகளுக்கும், கோடானு கோடி ரசிகர்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.