தவெகவின் ஒரு மாத கால ஆட்சி குறித்து இப்போது மதிப்பீடு சொல்ல இயலாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து திமுகதான் பதில் சொல்ல வேண்டும். தவெக ஆட்சி அமைத்து ஒரு மாதம்தான் ஆகிறது. இப்போது அவர்களுக்கு கற்றுக் கொள்ளக்கூடிய காலம். எனவே, இந்த ஒரு மாத ஆட்சி பற்றி இப்போது மதிப்பீடு சொல்ல இயலாது.
அதிமுகவில் நடப்பது அவர்களுடைய உள்கட்சி விவகாரம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அந்த பதவியை ராஜினாமா செய்கிற அளவுக்கு உள்ளே என்ன நெருக்கடி என்பது அவர்களுக்குத் தான் தெரியும். இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கக்கூடியது. திராவிட இயக்கம் என்ற முறையில் அதிமுக வலுவாக, சிதறாமல் இருப்பது தமிழக அரசியலுக்கு நல்லது.
ஆளூர் ஷாநவாஸ் தலைமையோடு தொடர்பில் இருக்கிறார். வெளிநாடு சென்று திரும்பியுள்ள அவர் விரைவில் என்னை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. அவருடன் கலந்து பேசி முடிவு எடுக்கவில்லை என்பதைத் தவிர அவருக்கு வேறு வருத்தம் இல்லை.
வன்னிஅரசு அமைச்சர் பதவியேற்கும் விழாவுக்கு அவர் தாமதமாக வந்த நிலையில் அவருடைய வாகனம் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், திட்டமிட்டு அவரைப்பற்றி திரும்பத் திரும்ப அவதூறுகளை பரப்பி வருகின்றனர். கட்சிக்குள் எந்த குழப்பமும், பிரச்சினையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.





