ஜேர்மனியில் வேலை இருப்பதாக ஆசை காட்டும் செய்திகள்

தெற்காசியர்கள் பலருக்கு, மேலை நாடுகளில் வேலை செய்ய ஆசை எப்போதுமே இருந்துவருவதை மறுப்பதற்கில்லை.

அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, அவர்கள் மேலை நாடுகளில் கொடுக்கப்படும் ஊதியம், தங்கள் நாட்டுப் பணத்தில் எவ்வளவு என்று கணக்குப் பார்க்கிறார்கள்.

உதாரணமாக, கனடாவில் ஒரு மாதத்துக்கு 2,000 டொலர்கள் ஊதியம் என்றால், அதை இலங்கை பணத்துக்கு மாற்றினால், அது 4,77,367.71 ரூபாய், இந்தியப் பணத்தில் 1,36,130 ரூபாய்.

அதேபோல, ஜேர்மனியில் ஒரு மாதத்துக்கு 2,000 யூரோக்கள் ஊதியம் என்றால், அதை இலங்கை பணத்துக்கு மாற்றினால், அது 7,70,740 ரூபாய், இந்தியப் பணத்தில் 2,19,712 ரூபாய்.

விடயம் என்னவென்றால், தெற்காசியர்களின் தேவையையும், ஆசையையும் பல மேற்கத்திய நாடுகள் பயன்படுத்திக்கொள்கின்றன எனலாம்.

 

அதாவது, உண்மையை வெளிப்படையாகக் கூறினால், பல மேற்கத்திய நாடுகளில், எக்கச்சக்கமான பணியாளர்கள் பணி ஓய்வு பெற இருக்கிறார்கள்.

அவர்களுடைய இடத்தை நிரப்ப அங்கு போதுமான இளைஞர்கள் இல்லை, அத்துடன், சில குறிப்பிட்ட வேலைகளைச் செய்ய அங்குள்ள இளைஞர்கள் தயாராகவும் இல்லை.

ஆகவே, இந்த நாடுகள் இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளிலுள்ள இளைஞர்களை ஆசை காட்டி இழுக்கின்றன.

ஆனால், அங்கு செல்லும்போது, பலரும், தாங்கள் எதிர்பார்த்துவந்த வேலை கிடைக்கவில்லை என உணரும்போது ஏமாற்றமடைகிறார்கள்.

லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து வெளிநாட்டுக்கு வந்தாயிற்று. ஆகவே, அப்படியே திரும்பிப் போக முடியாது. எனவே, கிடைத்த வேலையை செய்யலாம் என்னும் ஒரு நிலை உருவாகிவிடுகிறது.

இந்நிலையில், இப்படி இந்திய இளைஞர்களும், வேலைக்காக வருபவர்களும் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என ஐரோப்பிய ஊடகம் ஒன்றே செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இப்படி ஏமாற்றப்படுபவர்கள் பட்டியலில், திறன் மிகு பணியாளர்களை சேர்க்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.

இந்தியா போன்ற நாடுகளிலிருந்து ஜேர்மனிக்கு கல்வி கற்பதற்காகவோ, அல்லது வேலைக்காகவோ வரும் பல இளைஞர்கள், கடன் வாங்கியோ அல்லது இருக்கும் சொத்தை விற்று அல்லது அடமானம் வைத்தோ அதற்கான பணத்தை தயார் செய்கிறார்கள்.

மாணவர் விசா மூலம் ஜேர்மனிக்கு வருவதற்கே, 20,000 யூரோக்கள் செலவாகிறது. இந்தியப்பணத்தில் அது 21,98,200 ரூபாய், இலங்கை மதிப்பில் 77,07,400 ரூபாய்.

 

அத்துடன், அவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் சுமார் 12,000 யூரோக்கள் இருப்பதை நிரூபிக்கவும் வேண்டும்.

12,000 யூரோக்கள் என்பதி இந்திய மதிப்பில், 13,19,004 ரூபாய், இலங்கை மதிப்பில், 46,24,440 ரூபாய்!

ஆக, இப்படி எக்கச்சக்கமான பணத்தை செலவு செய்து ஜேர்மனிக்கு வரும் இந்தியர்கள் முதலானோர், அங்கு வந்த பிறகு நிலைமை எதிர்பார்த்ததைப்போல் இல்லை, அதாவது, தாங்கள் விளம்பரங்களில் பார்த்ததுபோலவே அல்லது தங்கள் ஏஜண்டுகள் ஆசை காட்டியதுபோலவோ இல்லை என தெரியவரும்போது, வேறு வழியில்லாமல், ஏதாவது ஒரு வேலையை செய்தாகவேண்டும் என்ற கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள்.

அப்படி பலருக்கு கிடைக்கும் வேலை, அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, உணவு டெலிவரி செய்யும் வேலை.

வீடுகளில் தாய்மார்கள் பாத்திரம் கழுவச் சொல்லும்போது முகம் சுழிக்கும் பெண் பிள்ளைகள் பலர், ஜேர்மனியில் இறைச்சி வெட்டும் தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இதற்கிடையில், உணவு டெலிவரி நிறுவனங்கள் நேரடியாக ஆட்களை வேலைக்கு எடுக்காமல், ஏஜன்சிகளுக்கு துணை காண்ட்ராக்டில் விட, அவர்கள் வேலை செய்பவர்களுக்கு குறைந்த ஊதியம் கொடுப்பதும், சில நேரங்களில் சம்பளப்பணத்தை பிடித்துவைத்துக்கொள்வதும் நடக்கிறதாம்.

 

வேலை கொடுப்பவரை நேரடியாக சந்திக்காமல், ஒன்லைன் அல்லது சமூக ஊடகங்கள் மூலமே தொடர்பு கொள்வதால், அவர்கள் ஏமாற்றினாலும் அவர்களைக் கண்டுபிடிக்கமுடியாது.

இன்னொரு பக்கம், அதிகாரிகள், வேலை வழங்குபவர்களைக் கண்டுகொள்ளாமல், டெலிவரி வேலை செய்யும் பணியாளர்களை குறிவைப்பதால், அதிகாரிகளுக்கு பயந்துகொண்டே வேலை செய்யும் சூழலும் உள்ளது.

இதில் மொழிப்பிரச்சினை இன்னொருபக்கம்!

ஆக, மொத்தத்தில், ஜேர்மனியில் நிறைய வேலை இருக்கிறது என ஆசை காட்டும் விளம்பரங்கள், உண்மை நிலவரம் என்ன என்பதைச் சொல்வதில்லை.

விளம்பரங்களை நம்பி ஜேர்மனிக்குச் செல்லும் இந்தியர்கள் முதலானோர், இப்படி பரிதாபங்களில் சிக்கி, நாட்டுக்கும் திரும்ப முடியாமல், ஏதோ ஒரு வேலையைப் பார்க்கிறார்கள் என்கிறது, தி லோக்கல் ஜேர்மனி என்னும் ஊடகம்!