பிரான்சில் காட்டுத்தீ பரவி, அதனால் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் விடயம் அமைதியின்மையை உருவாக்கியுள்ள நிலையில், தலைநகர் பாரீஸிலுள்ள பூங்கா ஒன்றில் இளைஞர் ஒருவர் தீவைத்துள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
அமைதியின்மையை உருவாக்கியுள்ள விடயம்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ள Fontainebleau காட்டில் பற்றிய தீ மக்களிடையே அமைதியின்மையை உருவாக்கியுள்ள நிலையில், வேண்டுமென்றேயோ அல்லது தெரியாமலோ தீயை துவக்கிய பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் ஒருவர் தன்னார்வலராக செயல்பட்ட தீயணைப்புவீரர் என்னும் செய்தி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பூங்காவில் தீவைத்த நபர் கைது
காட்டுத்தீயால் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற்போல், பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள பூங்கா ஒன்றில் தீவைத்துள்ளார் 23 வயது இளைஞர் ஒருவர்.

தகவலறிந்து அங்கு சென்ற பொலிசார், பாரீஸிலுள்ள மிகப்பெரிய பூங்காக்களில் ஒன்றான அந்த பூங்காவிலுள்ள காய்ந்த சருகுகளில் வைக்கப்பட்ட தீ மரம் ஒன்றிற்குப் பரவுவதைக் கண்டுள்ளார்கள்.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அந்தத் தீயை அணைத்தாலும், ஒரு சதுர மீற்றர் பரப்பளவுள்ள தாவரங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டன.
அதைத் தொடர்ந்து தீவைத்த அந்த நபர் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.



