புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வேர்களாக இருக்கும் அமைப்புக்கள் வலுவாக இருக்கின்போது பயங்கரவாதம் குறித்த சட்டங்கள் பலவீனமாக இருந்தால் அவை மீண்டும் தலைதூக்குவதற்கான ஆபத்துக்கள் உள்ளதாக பேராசிரியர் ரொஹான் குணரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமானது வலுவானதாக இருக்க வேண்டும் என்பதோடு அது தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அமையவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்’ சர்ச்சைக்குரிய சட்டவரைவானது ஐக்கிய நாடுகள் சபையின் முகவரகங்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உள்நாட்டு சிவில் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட பின்னூட்டங்களின் அடிப்படையில் மேலதிக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சர்வதேச நியமங்களுக்கு அமைவாக வரைவு இறுதி செய்யப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் கருத்து வெளியிட்டுள்ள பேராசிரியர் ரொஹான் குணரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் நீண்டகால ஸ்திரத்தன்மைக்கு வலுவான சட்டங்கள் அவசியமாகும். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் எக்காரணம் கொண்டும் நீர்த்துப்போகச் செய்யப்படக்கூடாது அரசியல் தலைவர்கள் ஆட்சிக்கு வருவதற்காகப்பேசும் சொல்லாடல்களுக்கு அப்பால் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அச்சுறுத்தல் தற்போது நிலத்தடியில் இருக்கும் புற்றுநோய் போன்றதாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். புலம்பெயர் தேசங்களில் அந்த அமைப்பின் வேர்களாக உள்ள வலையமைப்புகள் தற்போதும் வலுவாக இருக்கின்றன. அவ்வாறான நிலையில் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்கள் பலவீனமான இருக்கும்போது அவை மீண்டும் தலைதூக்கக்கூடும் ஆபத்துக்கள் உள்ளன.
அதேநேரம், சர்வதேசத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய குழுக்களான அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ் ஆகியவற்றின் ஊடுருவல்களைத் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் தேவையாக உள்ளன. இணையவெளியின் ஊடாக முன்னெடுக்கப்படும் தீவிரவாதப் பிரசாரங்கள் மற்றும் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வலுவான சட்டங்களும் நவீன புலனாய்வுத் திறன்களும்; அவசியமாகும்.
தற்போதைய நிலையில் நிறுத்தப்பட்டுள்ள புனர்வாழ்வுத் திட்டங்களை அரசாங்கம் உடனடியாக மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். மதத் தலைவர்கள் சதித்திட்டக் கோட்பாடுகளைப் பரப்பாமல் இருப்பதோடு தீவிரவாதத்தைத் தடுப்பதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.




